திங்கள், 18 மார்ச், 2024

ஜோதிநகர் பள்ளியில் மாணவர் சேர்க்கை - விழிப்புணர்வுப் பயணம்.....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பயணத்தில் முன்னதாக ஜோதிநகரின் முக்கிய சாலைகளில் மாணவர்களோடு இணைந்த மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது மாணவர்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த கோஷங்களை முழக்கினர். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஜோதிநகர், காமராஜ் நகர், நாச்சக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறுபட்ட சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான செய்திகளை உள்ளடக்கிய துண்டறிக்கைகளை வழங்கி அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளையும் ஜோதிநகர் அரசுப் பள்ளியில் சேர்த்திட வலியுறுத்தினர். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

புதன், 28 பிப்ரவரி, 2024

தேசிய அறிவியல் நாள் விழா – 2024 மற்றும் பன்னாட்டு பயனுறு தமிழ் மன்ற நூலகத் துவக்கவிழா……

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2024) தேசிய அறிவியல் நாள் விழா - 2024 மற்றும் பன்னாட்டு பயனுறு தமிழ் மன்ற அறிவியல் தமிழ் நூலகத் துவக்க விழா ஆகியன மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக அறிவியல் ஆசிரியர் திருமதி மா. யோகலட்சுமி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளதாக கூறி, அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், மு. அனிதா ஆகியோர் நிகழ்வு குறித்து கருத்துரை வழங்கினர். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தனது உரையில் இன்றைய நாளின் முக்கியத்துவம் குறித்தும், தேசிய அறிவியல் நாளாக பிப்ரவரி 28ஐ இந்திய ஒன்றிய அரசு அறிவிக்க காரணமாக அமைந்த நிகழ்வான ”இராமன் விளைவு” வெளியிடப்பட்ட நாள் குறித்தும், இதற்காக உலகின் உயரிய நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் சர்.சி.வி இராமன் குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் சுகன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு தற்போது செல்ல உள்ள 4 இந்தியர்கள் பற்றியும், அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் கூறி பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பன்னாட்டு பயனுறு தமிழ் மன்ற அறிவியல் தமிழ் நூலகத்தை துவக்கி வைத்து, அதில் மாதம் தோறும் வாங்கப்படும் அறிவியல் தமிழ் நூல்களை மாணவர்கள் தொடர்ந்து படித்து, தமது பிற்கால வாழ்க்கை மேம்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டு, இந்த நூலகம் நமது பள்ளியில் அமைய உரிய வாய்ப்பையும், மாதம் தோறும் புதிய நூல்கள் வாங்கிட உரிய நிதி உதவியும் அளித்திட முன்வந்துள்ள பன்னாட்டு பயனுறு தமிழ் மன்றத்திற்கு நமது பள்ளியின் சார்பிலான நன்றியை தெரிவிப்பதாகவும் கூறி முடித்தார். பின்னர் 6 முதல் 8 வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் மாணவர்கள் தாமே தயாரித்து கொண்டு வந்திருந்த 24 அறிவியல் ஆய்வுப் படைப்புகளை காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றி விளக்கினர். இது இன்றைய நிகழ்வின் சிறப்பாக அமைந்தது. பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.